Wednesday, February 13, 2008

ஷஹீத் பழனிபாபா - ஓர் சரித்திரப்பார்வை






"ஷஹீத் பழனிபாபா ஓர் சரித்திரப்பார்வை"

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்..,

குவைத்தில் கடந்த 01-02-2008 அன்று மிர்காப் பகுதியில் மாவீரன் திப்பு சுல்தான் அரங்கத்தில் (தஞ்சை உணவகம்) இரவு 8-00மணிக்கு தமிழக இஸ்லாமிய மாணவர் பேரவை ஏற்பாடு செய்த "ஷஹீத் பழனிபாபா ஓர் சரித்திரப்பார்வை" என்ற நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு குவைத்தின் முக்கிய பிரமுகர்கள் பெருந்திரளாக வருகை தந்திருந்தனர். வந்திருந்தவர்களை பெரம்பலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் ஒன்றியசெயலாளர் சகோ. முஹம்மது இக்பால் அவர்கள் வரவேற்று அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முன்னிலை வாத்தியார் என்றழைக்கப்படும் சகோ. அப்துல் லத்தீப் அவர்களும், தலைமை இப்பேரவையின் தலைவர் கா. ரஹ்மத்துல்லாஹ் அவர்களும் ஏற்றனர். கம்யூனிஸ தோழர். ஆர்.கே. சரவணன் அவர்கள் புரட்சிக்கவிதை ஒன்று வாசிக்க நிகழ்ச்சி இனிதே துவங்கியது. பல்வேறு பட்ட அமைப்பினரும், சிந்தனையாளர்களின் சிறப்புரைகளோடு "இந்த அரசாங்கம் என்னை தண்டிக்கட்டும், நாளைய வரலாறு என்னை விடுதலை செய்யும்" என்ற புரட்சியாளன் பிடல்கேஸ்ட்ரோவின் வைரவரிகளோடு துவங்கிய நன்றியுரையும் அதைத் தொடர்ந்த பழனிபாபா அவர்கள் பல்வேறு தலைப்பில் ஆற்றிய உரைகளின் வீடியோ தொகுப்புகளும் ஒளிபரப்பப்பட்டது. இரவு புரட்சிகர சமபந்தி விருந்தோடு விழா இனிதே நிறைவடைந்தது. இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக இஸ்லாமிய மாணவர் பேரவையின் செயற்குழு உறுப்பினர்கள் அப்துல்ரஹ்மான், முஹம்மது அலி, பரக்கத்துல்லாஹ், பிர்தவ்ஸ் பாஷா, அமானுல்லாஹ், நாஞ்சில் சுரேஷ், அன்வர் அலி, முஹம்மது அலி ஜின்னா மற்றும் பலர் இணைந்து செய்திருந்தனர்.

Wednesday, February 6, 2008

மாவீரன் பகத்சிங் - நூற்றாண்டு விழா



மதிப்பிற்குரியவர்களுக்கு.., குவைத்தில் கடந்த 25-01-2008 அன்று இரவு 08-30 மணிக்கு மிர்காப் பகுதியிலுள்ள தஞ்சை உணவகத்தில் மாவீரன் பகத்சிங் அவர்களுக்கு நூற்றாண்டு விழா நடத்தப்பட்டது. தோழர். அமானுல்லாஹ்-திருச்சி அவர்கள் வரவேற்புரையாற்றி விழாவை தொகுத்து வழங்கினார். அவ்விழா தோழர். ஃபிரான்சிஸ் அவர்களின் புரட்சிப்பாடலோடு துவங்கியது. குள்ளாஞ்சாவடி புதுயுகம் வீதி நாடகக்குழு அமைப்பாளர் தோழர். ஆர். கே. சரவணன் அவர்கள் முன்னிலை வகிக்க, தமிழக இஸ்லாமிய மாணவர் பேரவை-குவைத் தலைவர் தோழர். கா. ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் தலைமையில் நடந்தது. அவ்விழாவில் சிறப்புச்சேர்க்க தோழர். பிஃரான்சிஸ் மற்றும் தோழர். செந்தில்குமார் இருவரும் புரட்சி மற்றும் சிந்தனையைத் தூண்டும் பாடல்களை பாடினர். சிறப்புரையாக தோழர்.மதியழகன்-பாலைக்குயில் கவிஞர்கள் சங்கம், தோழர். கவிஞர் ஸாதிக்-தலைவர், தமிழோசை கவிஞர் மன்றம், தோழர். பட்டு்க்கோட்டை சத்யா, தோழர். சம்சுத்தீன் மற்றும் கவிநடையில் உரையாற்றிய எழுச்சிப்பாவலர் விழுப்புரம் ஷாஜி இருதியாக புரட்சிக் கவிதை வாசித்த தோழர். அமானுல்லாஹ்-தலைவர், தமுமுக-குவைத் மண்டலம் இவர்கள் அனைவரும் இக் காலத்திலுள்ள அரசியல் சூழ்நிலையையும், மாவீரன் பகத்சிங்கின் வீர வரலாற்றையும் மக்கள் மத்தியில் உணர்ச்சி பொங்க எடுத்து வைத்தனர். இரவு மணி பதினொன்றை தாண்டியும் மக்கள் கூட்டம் கட்டுக்களையாமல் அமர்ந்திருந்தது மக்கள் ஏதோ ஒரு மாற்றத்தை எதிர்பார்ப்பது தெள்ளத்தெளிவாக விளங்கியது. குவைத்திலுள்ள தமிழ், இஸ்லாமிய, கிருஸ்த்தவ சங்கத்தை சேர்ந்தவர்களும், பகத்சிங்கை பற்றி அறிந்திருந்த இலங்கைத்தமிழர்களும் மற்றும் பல முக்கிய பிரமுகர்களும் பெருமளவில் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். தோழர். பரங்கிப்பேட்டை அ.ப. கலீல்அஹமது பாகவீ-செயலாளர், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் அவர்கள் நன்றியுரை வழங்க தேனீர் விருந்துடன் விழா இனிதே நிறைவடைந்தது.


Tuesday, November 27, 2007

மிளகாய்பொடி வீசப்பட்ட அழகி

போர்ட்டோரிக்கோ நாட்டில் நடந்த அழகி போட்டியில் மேரி நிவேரா என்ற அழகி வெற்றி பெற்றார். இவர் போட்டிக்கு வரும் போது இவரது முகத்திலும், உடலிலும், உடையிலும் யாரோ ஒருவர் மிளகாய் பொடியை தூவி விட்டார். அவரது மேக்கப்பையும் கலைத்து விட்டனர். இதனால் அவரது உடலில் எரிச்சல் ஏற்பட்டது. கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அதையும் சமாளித்துக் கொண்டு அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் போட்டியில் கலந்து கொண்டு அவரே அழகு ராணியாக முடி சூட்டிக் கொண்டார். கண்களில் இருந்து வடியும் கண்ணீரை அவர் துடைத்த காட்சி. மேடையை விட்டு இறங்கியதும் அவசரம் அவசரமாக உடைகளை களைந்து ஐஸ்கட்டிகளை உடலில் தடவி உடல் எரிச்சலை போக்கினார்.
* அழகிப்போட்டிக்கு எதிர்ப்பு காட்ட வந்தவராக இருந்தால் வாழத்துக்கள்

தமுமுக - குவைத் சார்பாக நன்றி அறிவிப்பு மாநாடு


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்ம...)

குவைத் நாட்டில் தமுமுக - குவைத் மண்டலத்தின் சார்பாக இஸ்லாமியர்களுக்கும், கிருஸ்த்தவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு அளித்த தமிழக அரசுக்கு நன்றி பாராட்டும் வகையில் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு ''நன்றி அறிவிப்பு மாநாடு" ஏற்பாடு செய்யப்பட்டது. தலைமை யிலிருந்து மாநாட்டுக்கான தேதியை அறிவிப்பு செய்தவுடனேயே இதற்கான ஆயத்த வேலைகள் துவங்கப்பட்டன. குவைத் முர்காப் சிட்டியில் தஞ்சை உணவகத்தில் ஷஹீத் ராஜா முஹம்மது நினைவு அரங்கத்தில் கடந்த 23-11-2007 அன்று இரவு 8:00 மணிக்கு மாநாடு துவங்கப்பட்டது. பொருளாளர் சகோ. ஃபஜ்லுர்ரஹ்மான்-திருச்சி அவர்கள் கிராஅத் ஓதி மாநாட்டை துவக்கி வைத்தார். சகோ. கலீல்ரஹ்மான்-எருமப்பட்டி அவர்கள் வரவேற்புரையாற்றி மண்டலத்தலைவர் அமானுல்லாஹ்-திருச்சி அவர்களை தலைமையுரையாற்ற அழைத்தார்.


தலைவரின் தலைமையுரையில் "இந்த இடஒதுக்கீடு 60 ஆண்டுகால கனவு, 12 ஆண்டுகால போராட்டம், 16 மாத திட்டம், 12 நிமிடங்களில் நிறைவேறிய அவசரச்சட்டத்தில் இந்தத் தனி இடஒதுக்கீட்டை அறிவித்த கலைஞர் அவர்களுக்கும், இடஒதுக்கீட்டையும், சிறைவாசிகளின் விடுதலையையும் கோரிக்கையாக வைத்து திமுகவுடனான கூட்டனிக்கு திட்டமிட்டு அதன்படி உழைத்து வெற்றிபெறச்செய்த தமுமுக தலைமை முதல் அடித்தொண்டன் வரை அனைவருக்கும் நன்றி " கூறினார்.



சிறப்பு அழைப்பாளராக தமுமுக-ரியாத் மண்டல செயலாளர் சகோ. ஷாநவாஸ்-லால்குடி அவர்களும், குவைத் - தமிழ் கிருஸ்த்தவ திருச்சபையின் தலைவர் சகோ. ஹெர்பர்ட் சத்தியதாஸ்-நாகர்கோயில் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். குவைத்தில் அனைவருக்கும் அறிமுகமான நீண்டகாலமாக சமுதாயத்தொண்டாற்றி வரும் பேரா. தாஜ்தீன்-புதுஆத்தூர் அவர்களும் தங்களது உரையில் பெற்றுள்ள இடஒதுக்கீட்டை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து விளக்கி பேசினார்.



மறைந்த இணைச்செயலாளர் ராஜாமுஹம்மது அவர்களின் அன்புச்சகோதரர் சகோ. முபாரக்அலி-லால்குடி அவர்கள் கலந்துகொண்டு பணியாற்றிய டெல்லிப்பேரணி, சிறைநிரப்பும் போராட்டம், இரண்டு வாழ்வுரிமை மாநாடுகள் மற்றும் ஏனைய நிகழ்வுகளையும் அரங்கம் நெகிழ அழகாக எடுத்துரைத்தார். குவைத் மண்டல இணைச்செயலாளர் சகோ. தமீம் அன்சாரி-முத்துப்பேட்டை அவர்களின் நன்றியுரையோடு மாநாடு இனிதே நிறைவுபெற்றது. மாநாட்டிற்கு பல்வேறு இஸ்லாமிய, தமிழ், கிருஸ்த்துவ அமைப்புகளில் இருந்தும் பெருந்திரளாக வந்திருந்து விழாவைச் சிறப்புச் செய்தனர்.



அதே மாநாட்டில் டிசம்பர் 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை மவ்லவி பி.அப்துல்ரஹீம் நினைவு அரங்கத்தில் நடைபெறவுள்ள பாபர்மசூதி கண்டனக்கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதோடு இதுவரை ரியாத் மண்டலத்தில் செயலாளராக பணியாற்றிய சகோ. ஷாநவாஸ் அவர்கள், தமுமுகவினர் அனைவரின் விருப்பத்திற்கிணங்க குவைத் மண்டலத்தில் மண்டலச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இரவு தேனீர் விருந்தோடு மாநாடு 10:30 மணிக்கு இனிதே நிறைவடைந்தது. தமுமுகவின் மார்க்கப்பிரிவான இஸ்லாமிய பிரச்சாரப் பேரவையின் வரவேற்பு போஸ்டர் மாநாட்டிற்கு வந்தவர்கள் அனைவரையும் வரவேற்றது.


News from:
TMMK - Media Group

Kuwait

Monday, November 5, 2007

சங்கரன்கோவில் அருகே தேவர் சிலை உடைப்புகிராமமக்கள் சாலை மறியல்-கல்வீச்சு; போலீஸ் தடியடி


சங்கரன்கோவில் அருகே முத்துராமலிங்கத்தேவர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து நேற்று கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு போலீசார் மீது கல்வீசி தாக்கினார்கள். இதையொட்டி போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

தேவர் சிலை உடைப்பு
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து ராஜபாளையம் செல்லும் ரோட்டில் வேலாயுதபுரம் கிராமம் உள்ளது. அந்த ஊர் பொதுமக்கள் சார்பில் ரோட்டு ஓரம் தேவர் சிலை அமைத்து இருந்தனர். சிலையைச் சுற்றி கம்பி வலை அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் யாரோ மர்ம ஆசாமிகள் அந்த கம்பி வலையை உடைத்து உள்ளே புகுந்து தேவர் சிலையின் முகத்தை உடைத்து சேதப்படுத்தி விட்டனர்.
சாலை மறியல்
நேற்று காலையில் தகவல் அறிந்ததும் அந்த கிராம மக்கள் அங்கு ஆண்களும், பெண்களும் திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து அங்கு திரண்டு நின்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். "சிலையை உடைத்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். அந்த இடத்தில் வெண்கல சிலை அமைக்க வேண்டும்'' என்று ஊர் மக்கள் கூறினார்கள். அந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை சாலை மறியலை கைவிட மாட்டோம். மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் இங்கு வரவேண்டும் என்று அவர்கள் கூறி தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை
அதைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர், நெல்லை உதவி கலெக்டர் (ஆர்.டி.ஓ.) ராஜேந்திரன் ஆகியோர் அங்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையொட்டி உடனே சமுதாய பெரியவர்கள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. அதைத் தொடர்ந்து நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கண்ணப்பன் அங்கு விரைந்து வந்தார். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும் படி போலீசார் கூறினார்கள். ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை.

தடியடி
இதையொட்டி கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் போலீசார் மீது கல்வீசி தாக்கினார்கள். கல்வீச்சில் போலீசார் சிலரும், தடியடியில் பொதுமக்கள் சிலரும் காயம் அடைந்தனர். அங்கு நின்று கொண்டு இருந்த ஒரு பஸ் மீது பொதுமக்கள் கல்வீசி தாக்கினார்கள். இதனால் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. தடியடி காரணமாக பொதுமக்கள் சிதறி ஓடியதால் அந்தப் பகுதியில் சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனங்கள், செருப்புகள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. அந்தப் பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் பதட்டம் நிலவுகிறது. இதனால் அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

போக்குவரத்து பாதிப்பு
சாலை மறியல் போராட்டம் காரணமாக அந்தப் பகுதியில் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிறகு அந்தப் பகுதியில் பஸ்கள் வழக்கம் போல் ஓடின. தேவர் சிலை சேதப்படுத்தப்பட்ட தகவல், வேலாயுதபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் பரவியது. இதனால் ராஜபாளையம் சுற்றுவட்டாரப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவானது. ராஜ பாளையம்-சங்கரன்கோவில் சாலை விலக்கில் சிலர் மரக் கிளைகளை வெட்டி போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நின்றன. மேலும் அய்யனார்புரம் பகுதியில் கிராம மக்கள் ஒன்று திரண்டு வந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ராஜபாளையத்தில் இருந்து சங்கரன்கோவில் வழியாக நெல்லைக்கு செல்லும் அனைத்து பஸ்களும் முறம்பு வண்டிகாளியம்மன் கோவில் தெருவில் இருந்து தடுத்து நிறுத்தப்பட்டு மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.

இதற்கிடையே சிவகாசி அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையில் நேற்று சிலர் கடைகள் மீது கல்வீசியதால் அந்த பகுதியில் இருந்த அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. ஏழாயிரம்பண்ணையில் இருந்து கோவில்பட்டி செல்லும் வழியில் இ.ரெட்டியபட்டியில் சிலர் சாலையில் கற்களை போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் கோவில்பட்டியில் இருந்து ஏழாயிரம்பண்ணை வழியாக சாத்தூர் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.